Friday 29 March 2013

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...!!!


திருநெல்வேலி என்றாலே அல்வா ஞாபகம் வருவதைப்போல,திருப்பதி என்றாலே லட்டு ஞாபகம் வருவதைப்போல,பழனி என்றாலே பஞ்சாமிர்தம் ஞாபகம் வருவதைப்போல ,விடுதலை புலிகள் என்றாலே "மனித வெடிகுண்டு தாக்குதல்"ஞாபகம் வருவதை தவிர்க்க முடியாது.அவர்களின் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்கள்,சிங்களர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்!!!
இப்போது விடுதலை புலிகளும் இல்லை.தற்கொலை படை தாக்குதலும் இல்லை.அதனால் என்ன....?அவர்களின் கடந்த கால தாக்குதல்களின் புகைப்படங்கள் இருக்கிறதே!இதுபோதாதா...?அந்த வீராதி வீரர்களின் மனித நேயத்திற்கு சான்றுகூற...!!!

























விடுதலை புலிகள் செய்த "வீர சாகசங்கள்"இன்னும் அநேகம் உண்டு.அவற்றின் புகைப்படங்களை வெளியிட்டால், அவ்வாறு  வெளியிடப்படும்  புகைப்படங்கள் இந்த உலகம் கொள்ளாது என நினைக்கிறேன்.ஆமென்!

Friday 22 March 2013

"இரண்டாம் டெசோ" -சினிமா விமர்சனம்


                                        இரண்டாம் டெசோ படத்தில் ஒரு காட்சி !
                           
சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் படம் இரண்டாம் டெசோ.கலைஞர் கிரியேசன் சார்பில் மு.கருணாநிதி கதை வசனம் எழுதி இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ள இந்த படம் வசூலில் தோல்வி கண்டாலும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு திரைக்காவியம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

படத்தின் கதை இதுதான்;-
சென்னையில் வாழும் ஹீரோ கருணாநிதி,திமுக என்ற வர்த்தக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.டெல்லியில் வசிக்கும் அவருடைய நண்பர்களான சோனியாவும்,மன்மோஹனும் காங்கிரஸ் என்ற வர்த்தக நிறுவனத்தை நடத்திவருகிறார்கள்.கருணாநிதியும்,அவருடைய டெல்லி நண்பர்களும் இணைந்து ஐக்கிய முற்போக்கு கம்பெனி என்ற வர்த்தக நிறுவனத்தை துவக்கி அதையும் வெற்றிகரமாக நடத்தி பெரும் லாபம் குவிக்கிறார்கள்.

இப்படி இவர்களின் வியாபாரம் ஜரூராக போய்க்கொண்டிருக்கும் வேலையில் பக்கத்து தீவுநாடான இலங்கையில் ஒரு யுத்தம் மூள்கிறது.ராஜபக்சே என்பவரது கொலைப்படைகளும்,பிரபாகரன் என்பவரது கொலைப்படைகளும் இந்த யுத்தத்தில் ஈடுபடுகின்றன.ராஜபக்சே கருணாநிதியின் டெல்லி பார்ட்னர் சோனியாவின் நண்பராவார்.சோனியாவின் கணவர் ராஜீவ் என்பவரை பிரபாகரன் கொன்றுவிடுவதால் அவர் ராஜபக்சேயின் உதவியுடன் பிரபாகரனை ஒழிக்க முயல்கிறார்.

கடுமையான யுத்தத்தின் முடிவில் பிரபாகரனும்,அவரது கொலைப்படைகளும் ராஜபக்சேயின் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுகின்றன.அப்போது ஏராளமான அப்பாவி மக்களும் கொல்லப்படுகிறார்கள்.இச்சம்பவத்தினால் தமிழ்நாட்டில் கருணாநிதியின் வர்த்தக நிறுவனம் மேல் மக்களுக்கு அதிருப்தியும்,கோபமும் ஏற்படுகிறது.இதை பயன்படுத்தி அவரது போட்டி நிறுவனமான அம்மா &சும்மா என்ற மற்றொரு கம்பெனிக்கு மக்களின் ஆதரவு பெருகுகிறது.

இதனால் கலக்கமடையும் கதாநாயகன் கருணாநிதி மக்களின் ஆதரவை திரும்பபெறவும்,இழந்த நற்பெயரை மீட்கவும் "இரண்டாம் டெசோ"என்ற அமைப்பை உருவாக்குகிறார். தனது டெல்லி நண்பர்களோடு புதிய "வர்த்தக பேரங்களை"நடத்தி,அதன் மூலமாக எவ்வாறு தனது நிறுவனத்தை அவர் மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்புகிறார் என்பதை சுவாரஸ்யமாய் காட்டுகிறது இந்த இரண்டாம் டெசோ திரைப்படம்.

படத்தின் ஆரம்பமே போர்கள காட்சிதான்.இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில்  இந்த காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.ராஜபக்சேவும்,அவரது தம்பி கோத்தபையாவும் ஏராளமான ஆயுதங்களுடன் பிரபாகரனின் கொலைப்படைகளை தாக்க,பிரபாகரனின் படைகள் வீராவேசத்தோடு பாய்ந்து சென்று அப்பாவி தமிழர்களின் முதுகுகளுக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் காட்சி பிரமிப்பூட்டுகிறது.இறுதியில்,கொடியவன் கோத்தபைய்யா அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றதும் முதுகின் பின்னாலிருந்து வெளிவரும் பிரபாகரன் படையினர் "நாங்கள் சரணடைகிறோம்.எங்களை கொன்றுவிடாதீர்கள்"என்று போர்குணத்தோடு கண்களில் நீர் மல்க கெஞ்சும் காட்சி கல் மனதையும் கலங்க வைக்கிறது.அவர்களின் கெஞ்சல்களை பொருட்படுத்தாமல் கொலைவெறியன் கோத்தபையா ,சின்னஞ்சிறுவர்கள் என்றும் பாராமல் பிரபாகரனின் கொலைப்படைகளை ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லும் காட்சியில் நம் கண்கள் குளமாகின்றன.பிரபாகரனின் சடலத்தை காட்டும் காட்சியில் அவர் முன்பொருமுறை பேசிய "நானும்,ராஜபக்சேவும் சகோதரர்கள்.எங்கள் பிரச்னையில் தலையிட எந்த நாயுக்கும் உரிமையில்லை"என்ற வார்த்தைகள் பின்னணியில் ஒலிப்பது "டைரக்டர் டச்"!!!

தனது நண்பன் பிரபாகரன் இறந்த தகவல் கிடைத்தாலும் வர்த்தக நலன் கருதி அதை நம்ப மறுக்கும் காட்சியில் கருணாநிதியின் நடிப்பு சற்று நாடகத்தனமாக அமைந்திருக்கிறது.இரங்கல் கவிதை வாசித்தால் டெல்லி வியாபாரம் பாதிக்கும் என்ற காரணத்தால் நான்கு சுவர்களுக்குள் அவர் அழுது புலம்பும் காட்சியும் நாடகத்தனமே.ஹீரோவுக்குரிய எந்த சாகசமும் செய்யாமல்  குடும்பநலன் கருதி அடக்கி வாசிக்கிறார் கருணாநிதி.

ஹீரோ டம்மியாக போனாலும் காமெடி காட்சிகள் படத்திற்கு தோள் கொடுக்கின்றன.காமெடியன்களாக ஹீரோவுடன் வலம்வரும் வீரமணியும்,திருமாவளவனும் தேர்ந்த நகைச்சுவை நடிகர்களாக தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.வீரமணி அந்த கால நகைச்சுவை நடிகர் .வே.ராமசாமி பாணியில் தொட்டதற்க்கெல்லாம் "பார்ப்பன சதி"என்று கூறி குபீர் சிரிப்பை வரவைக்கிறார்.தூங்கிகொண்டிருக்கும் வீரமணியை திருமா எழுப்ப,"என்ன....?அதுக்குள்ள விடிஞ்சுருச்சா ?எல்லாம் பார்ப்பன சதி"என்று சொல்லும் காட்சியிலாகட்டும்,பஸ்ஸில் பயணித்து கொண்டிருக்கும்போது திடீரென்று வண்டி நிற்க ,வீரமணி எழுந்து "என்ன...பஸ் ப்ரேக் டவுனா..?எல்லாம் பார்ப்பன சதி"என்று வசனம் பேசும் காட்சியிலாகட்டும் ,சும்மா சொல்லக்கூடாது....வீரமணி அடிக்கும் லூட்டியில் தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது."தந்தை பெரியார் மட்டும் பிறந்திருக்கா விட்டால் ஆபிரகாம் லிங்கனே ஆடு,மாடுதான் மேய்த்து கொண்டிருந்திருப்பார்" என்று அவர் அடிக்கும் "விட்"டில் சிரித்து,சிரித்து வயிறு புண்ணாகிவிடுகிறது.

ஒருபுறம் வீரமணி எவர்க்ரீன் காமெடியில் பட்டையை கிளப்ப,மற்றொருபுறம் திருமா க்ளாஸிக் காமெடியில் கலக்குகிறார்.தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் பயணித்து ராஜபக்சேவை "கொலைகாரன்"என்று வசைபாடும் போதும் ,திமுக வர்த்தக குழுவோடு கொழும்பில் ராஜபக்சேவை சந்திக்கும்போது வாயெல்லாம் பல்லாக அவரோடு சிரித்து உரையாடும்போதும் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார் திருமா.

ராஜபக்சேயிடம் விடைபெற்று கிளம்பும் நேரத்தில் "இப்ப போறேன்.ஆனா..திரும்பி....( சற்று இடைவெளிவிட்டு)..வரமாட்டேன்னு சொல்லவந்தேன்"என்று ஜகா வாங்கும்போது திருமாவின் முகபாவனையை பார்த்து சிரிக்காதவர்களே இருக்கமுடியாது.

கருணாநிதியின் டில்லி பார்ட்னர்களாக வரும் சோனியாவும்,மன்மோகனும் தங்களின் மர்ம நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்கள்.கருணாநிதி இருவருக்கும் சளைக்காமல் கடிதம் எழுதுவதும்,ஒவ்வொரு முறையும் "நானும் கவலைப்படுகிறேன்"என்று பதில் கடிதத்தை மன்மோகன் எழுதுவதும் படம் நெடுக இடம்பெறுவது பெரும் அலுப்பை ஏற்படுத்துகிறது.

பின்னணி இசையில் கருணாநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் நாகூர் ஹனீபாவின் "சோனியாவிடம் கையேந்துங்கள்.அவர் இல்லையென்று சொல்லுவதில்லை"என்ற பாடல் ரசிக்கவைக்கிறது.

இறுதி காட்சியில் கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கம்பெனியில் இருந்து விலகுவதாக அறிவிப்பது சற்று நாடகத்தனமாக அமைந்துவிட்டது.எனினும்,இரண்டாம் டெசோ படத்தின் முதல் பாகமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த பாகத்தில் உண்மை நிலவரம் தெரியவரும்.

மொத்தத்தில் கருணாநிதியின் சமீபத்திய தோல்வி படவரிசையில் "இரண்டாம் டெசோ" -வும் ஒரு படுதோல்வி "மொக்க" படமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது!!!.