Sunday 28 April 2013

தாயே, இது என்ன கை...?


அது 1982-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.சரியாக நினைவில்லை.முன்னேபின்னே இருக்கலாம்.மத்தியில் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம்.பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்னைகளாலும் ,காங்கிரஸ் கட்சிக்கே உரிய ஊழல் அரசியலாலும் நாடு பெரும் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து கொண்டிருந்த போறாத காலம்.
அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்.(இன்றுவரை அதைத்தானே படித்திருக்கிறாய் என்று கேட்டுவிடாதீர்கள்) அடியேனுடைய ஊர் பள்ளிபாளையம் என்றாலும் நான் படித்தது குமாரபாளையத்தில்.இந்நகரம் பள்ளிபாளையத்திலிருந்து 13கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.அங்கே பாட்டி வீட்டில் தங்கி படித்துகொண்டிருந்தேன்.
அன்றைய காலத்தில் அடியேனுக்கு அரசியல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அறிவு கூட கிடையாது.
இந்திரா காந்தியை நேருவின் மகள் என்று தெரியும்.அவர் பிரதமராக உள்ளார் என்பதும் தெரியும்.ஆனால் பிரதமர் என்றால் என்ன அர்த்தம் என்று மட்டும் எனக்கு தெரியாது.
அப்படிப்பட்ட ஞானசூனியமான அடியேனுக்கு ஒருநாள் ஒரு பெரும் அரசியல் தலைவரை நெருங்கிசென்று கைக்குலுக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது.
இந்திரா காந்தியின் ஊழல் ஆட்சிக்கு எதிராக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஒரு மாபெரும் நடைபயணத்தை "கன்னியாகுமரியிலிருந்து காஸ்மீர்"வரை தொடங்கி நடந்து வந்தார்.அன்றைய காலக்கட்டத்தில் தேசம் முழுவதும் பெரும் செல்வாக்கு பெற்ற மக்கள்  தலைவர் அவர்.நேர்மைக்கும்,கண்ணியத்திற்கும் பேர்போன தலைவர்.அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்ற மாபெரும் தலைவர் அவர்!!!
நடைபயணத்தின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் பவானி நகருக்கு அவர் வந்து சேர்ந்தார்.பவானிக்கும்,குமாரபாளையம் நகருக்கும் இடையே காவேரி ஆற்று பாலம் உள்ளது.மிகவும் குறுகலான அந்த பாலம் வழியாகத்தான் அன்று போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது.அந்த பாலத்திலிருந்து சற்று அருகில் என்னுடைய பாட்டி  வீடு இருந்ததால் அந்த தலைவரை நேரில் பார்க்க எனக்கு பெரிய சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை.
உச்சி வெயில் மண்டையை பிளக்கும் கடுங்கோடை காலம்.அந்த தேசிய தலைவரை தரிசிக்க பவானி பாலத்தில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழிந்தது.சுண்டைக்காய் பயலான நானும் எனது சக சுண்டைக்காய் நண்பர்களும் ஆளுக்கொரு குச்சி ஐஸ்க்ரீம் சகிதம் அங்கே ஆஜராகியிருந்தோம்.அந்த தேசிய கட்சியின் உள்ளூர் தலைவர்களுள் ஒருவர் எனது உறவினர் என்பதால் நான் அவர் அருகில் நின்றுகொண்டு தலைவர் எப்போது வருவார்  என்று நிமிடத்திற்கு ஒருமுறை அவரை நச்சரித்து கொண்டிருந்தேன்.
சுமார் ஒரு மணிநேர காத்திருப்பிற்கு பிறகு தலைவர் பவானியில் இருந்து புறப்பட்டுவிட்டார் என்ற தகவல் கிடைக்க கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்திரா காந்தியின் ஜென்ம விரோதி என்று கருதப்பட்ட அந்த தலைவரை பார்க்க கிட்டதட்ட அனைத்து கட்சிக்காரர்களும் அங்கே ஆஜராகிவிட்டார்கள்.பெரும் ஜனத்திரளிடையே அந்த தலைவர் நடந்து வந்தார்.அவர் பார்வைக்கு கிடைத்ததும் மக்களின் உற்சாகம் பொங்கிவிட்டது.அந்த தலைவரை வாழ்த்தி பெரும் குரலில் கோஷமிட்டார்கள்.அர்த்தம் புரியாவிட்டாலும் நானும் உற்சாகமாக அந்த ஹிந்தி வாழ்த்தொலியை எழுப்பினேன்.தலைவர் அருகில் வரவர கூட்டத்தின் தள்ளுமுள்ளில் மாட்டிகொண்ட நான் அங்கேயும் இங்கேயுமாக இழுக்கப்பட என்னே அதிர்ஷ்டம் பாருங்கள்.சரியாக அந்த தலைவரின் அருகிலேயே நான் வந்துவிட்டேன்.அந்த தலைவர் என்னை பார்த்துவிட்டார்.என்னை பார்த்து ஏதோ சொன்னபடி அவர் கையை நீட்ட முழுக்கை சட்டை அணிந்திருந்த அவரது கையை பிடித்து நான் குலுக்கினேன்.அவரது பெயரை தவிர வேறெதுவும் அடியேனுக்கு தெரியாது.ஆனால் அவர் மாபெரும் ஒரு தேசிய தலைவர் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.அவருடைய கட்சி மீதும் எனக்கு பெரும் மரியாதையை பின்னாளில் வளர்த்துக்கொண்டேன்.
1980களில் அடியேனால் கைக்குலுக்கப்பட்ட அந்த தலைவர் பின்னாளில் இந்தியாவின் பிரதமராக சிறிது காலம் பதவிவகித்தார்.சாத்தானின் மகிமை வாய்ந்த கைகளால் அந்த பதவி அவருக்கு கிடைத்ததா என்று அடியேனுக்கு தெரியாது.ஆனால்,இந்த பதிவை இடும் இன்றைய தினம் ம.தி.மு.க.பொது செயலாளர் திரு.வைகோ அவர்களை குமாரபாளையம் அருகிலுள்ள குப்பாண்டபாளையம் என்ற கிராமத்தில் வைத்து அவரது கையை குலுக்கினேன்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திரு.வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார்.ஒரு அவசர வேலையாக குமாரபாளையம் சென்றபோது எதிரில் அவருடைய ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.ஓய்விற்காக திரு.வைகோ ஓரிடத்தில் அமர்ந்தபோது பலரும் அவரது கையை பிடித்து குலுக்க,அடியேனும் சந்தடிசாக்கில் அவரது கையைபிடித்து குலுக்கினேன்.
அடியேனின் கை அதிர்ஷ்டக்கார கையா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் முடிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதெல்லாம் சரி....உன்னால் பிரதமர் ஆக்கப்பட்ட (!)அந்த அதிர்ஷ்டசாலி தேசிய தலைவர் யார் என்று கேட்கிறீர்களா.....?
அவர் முன்னாள் "இளம் துருக்கியர்" முன்னாள் பிரதமர்.ராஜா சந்திரசேகர் சிங்!!!

Saturday 20 April 2013

சாத்தானின் TOP 10 ஸ்பெஷல் !!!


நண்பர்கள் பலருக்கு அடியேனின் பன்முக எழுத்து திறமையை(!)பார்க்க (படிக்க)ஆவல்.அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யாவிட்டால் சாத்தானாக பிறந்ததில் என்ன பலன்? இனி வரும் பல பதிவுகளில் சம்பந்தமில்லாமல் எதையாவது பதிவிட்டிருப்பேன்.சாத்தானுக்கு மறை கழண்டுவிட்டதா என்று சந்தேகப்பட்டுவிடாதீர்கள்.இந்த வார (!)பதிவு டாப் டென் இயக்குனர்கள்.அதாவது,சாத்தானை கவர்ந்த.ஹிஹி!!



10.  K.பாலச்சந்தர் (83)
தமிழ் சினிமாவையும் , கைலாசமய்யர்  பாலச்சந்தரையும் பிரித்துப்பார்க்க முடியாது.மேடை நாடகத்திலிருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு பாணியை வகுத்து,பிடிவாதமாக அதில் பயணித்து வெற்றிகண்டவர்.தனது முதல் படமான நீர்க்குமிழி -யில் நாகேஷை ஹீரோவாக நடிக்க வைத்த துணிச்சல்காரர்.மனித உறவுகளின் பிரச்னைகள்,சமூக அவலங்கள்,சூழலியல் மாற்றங்கள்,காதல்,என்று இவர் கருபொருளாக்கிய திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன.ரஜினி,கமல்,விஜய குமார்,ஸ்ரீப்ரியா,பிரகாஷ்ராஜ்    என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் நூற்றுக்கும் மேல்.90-களுக்கு பிறகு இவர் எடுத்த சில படங்கள் அதீத பிரச்சார நெடியுடன் அமைந்ததால் தமிழ் திரையுலகிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.சின்ன திரையில் நுழைந்து சில புகழ்பெற்ற தொடர்களை இயக்கி அங்கேயும்  முத்திரையை பதித்தவர்.


9. பாலு மகேந்திரா (74)
பாலு மகேந்திரா ஒரு ஈழ தமிழர் என்பது நம்மில் பலரும் அறிந்திராத செய்தி.இவரது உண்மையான பெயர் பாலநாதன் மகேந்திரன். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநிலவிருது பெற்றார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இரண்டு பெண்டாட்டிக்காரன் கதையை வைத்து இவர் இயக்கிய பல படங்கள் பெரும் வரவேற்ப்பை பெற்றவை.(அடியேனுக்கும் இரண்டு பெண்டாட்டிதான்.முதல் பெண்டாட்டியை அரிவாளால் வெட்டி கொன்றேன்.இடம்:கொடுமுடி.முதல் பெண்டாட்டி:ஒரு வாழை கன்று.ஹிஹி!!!)


8. ஜான் வூ (67)
ஜான் வூ ஹாலிவுட்டில் வெற்றிகரமாக கால் பதித்த சீனர்.இவரது ஆக்ஸன் படங்களுக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருக்கிறது.HARD TARGET ,BROKEN ARROW ,FACE /OFF ,போன்ற பல படங்கள் இவரது இயக்கத்தில் வந்திருந்தாலும் அடியேனை பெரிதும் கவர்ந்தது இவரது RED CLIFF .இரண்டு பாகமாக வந்த இந்த ஆக்ஸன் படம் மறக்கமுடியாத ஒரு அற்புதம்.


7. ரோமன் போலன்ஸ்கி (80)
ரஜ்மண்ட் ரோமன் தியெர்ரி போலன்ஸ்கி உலக சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்.பாரிஸில் பிறந்து போலந்தில் குடியேறிய யூதர். சிறு வயதில்
ஜெர்மானிய ஆதிக்கத்தில் போலந்து சீரழிந்ததை நேரடியாக கண்ணுற்றவர்.இவரது பல படங்களில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையில் இவரே.தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையே திரைப்படமாக்கி  உலக புகழ் பெற்றவர்.2002-இல் இவரது இயக்கத்தில் வந்த THE PIANIST மெய்சிலிர்க்க வைக்கும் காவியம்.


6. வூடி ஆலன் (78)
ஆலன் ஸ்டீவெர்ட் கோனிக்ஸ்பெர்க்    என்ற வூடி ஆலன் நியூ யார்க்கில் பிறந்த யூதர்.இவர் ஒரு பன்முக திறமையாளர். திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர், நகைச்சுவையாளர். திரைப்படங்களை எழுதி அவற்றை இயக்கும் இவர் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.2011-இல் இவர் இயக்கிய MIDNIGHT IN PARIS அவசியம் பார்க்கவேண்டிய படம்.


5. அனுராக் காஷ்யப் (41)
அனுராக் சிங் காஷ்யப் உலக தரத்திலான ஒரே இந்திய இயக்குனர் என்பது அடியேனின் கருத்து.இவருடைய ஒவ்வொரு படமும் அதற்கு சான்று பகரும்.2009இல் வெளிவந்த தேவ் டி (DEV D)படம் ஒன்றே போதும் இவரது திறமைக்கு சாட்சி சொல்ல.நாம் அனைவரும் அறிந்த தேவதாஸ் கதையை இப்படிக்கூட படமாக்க முடியுமா என அயரவைத்த அற்புதமான படம் அது.


4. பீட்டர் ஜாக்ஸன் (52)
பீட்டர் ராபர்ட் ஜாக்ஸன் நியூசிலாந்தில் பிறந்த ஹாலிவூட் இயக்குனர்.ஆரம்ப காலத்தில் ப்ரைன் டெட் போன்ற மகா மொக்கை படங்களை இயக்கிய ஜாக்ஸன் உலகம் புகழும் இயக்குனரானது லார்ட் ஆப் த ரிங் படங்கள் மூலமாக.இப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய கிங் காங் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகி வசூல் மழை பொழிந்தது.தற்போது த ஹாபிட் என்ற மூன்று பாக படங்களில் பிஸியாக இருக்கிறார்.அதில் முதலாவது படம் கடந்த டிசம்பரில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


3. ஜேம்ஸ் கேமரூன் (59)
ஜேம்ஸ் பிரான்ஸிஸ் கேமரூன் கனடாவில் பிறந்த ஸ்காட்டிஸ் ஆசாமி. த டெர்மினேட்டர், டெர்மினேட்டர் 2, ஏலியன்ஸ்,டைட்டானிக், அவதார் உள்ளிட்ட புகழ் பெற்ற ஆங்கில திரைப்படங்களை படைத்தவர்.கடந்த ஆண்டு மார்ச் 26இல் உலகிலேயே மிக ஆழமான கடல்பகுதியான மரியானா ட்ரெஞ்ச் -க்கு (ஆழம் 11கிலோ மீட்டர்)தனி ஆளாக சென்று திரும்பிய அசாதாரண துணிச்சல்காரர்.இவரது ஒவ்வொரு படமும் ஏற்கனவே வெளிவந்த இவரது படங்களின் வசூலை முறியடிக்கும்.தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை இவர் அளவுக்கு எந்த இயக்குனரும் தந்ததில்லை என்பதே இவரது திறமைக்கு சாட்சி.

2. மகேந்திரன்.C.(74)
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து சென்ற மாபெரும் கலைஞன்  மகேந்திரன்.இவரது முதல் படமான முள்ளும் மலரும் (இந்த தலைப்பிலுள்ள இரட்டை அர்த்தத்தை கவனித்தீர்களா?)ஆகட்டும் அடுத்தடுத்து இவர் இயக்கத்தில் வந்த உதிரிப்பூக்கள்,மெட்டி,ஜானி,நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற டாப் கிளாஸ் படங்களாகட்டும்  அனைத்துமே சர்வதேச தரமானது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்ய அடியேன் தயார்.இந்த படங்கள் அனைத்துமே மசாலா படங்கள் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


1. ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் (67)
ஸ்டீவென் ஆலன் ஸ்பீல்பெர்க் அமெரிக்காவில் பிறந்த ஜெர்மானிய யூதர்.உலக சினிமா வரலாற்றில் இவர் அளவுக்கு புகழ் ஈட்டிய இயக்குனர் எவருமில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு ஆறு முறை பரிந்துரைக்கப்பட்டு இரு முறை விருது வென்றவர்.1980க்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த அத்தனை பேரும் இவரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களை தத்ரூபமாக திரையில் காட்டி ரசிகர்களை மிரளவைத்தவர்.இவரது இயக்கத்தில் வந்த அற்புதமான படங்களில் அடியேனை பெரிதும் கவர்ந்த படங்கள்; JAWS (1975).E.T(1981)SCHINDLERS LIST(1993)  SAVING PRIVATE RYAN(1998)MUNICH(2005)


இந்த பட்டியலில் அடியேனை கவர்ந்த இயக்குனர்களை வரிசைப்படுத்தியிருக்கிறேன்.இதில் உங்களுக்கு நிச்சயம் முழு உடன்பாடு இராது என்பதை நானறிவேன்.எனினும் உயிரோடு இருக்கும் நபர்களை மட்டுமே நான் கவனத்தில் கொண்டு அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்தேன்.யஷ் சோப்ரா,ரிஷிகேஷ் முகர்ஜி,டோனி ஸ்காட்  போன்ற  என்னை கவர்ந்த இயக்குனர்கள் பலர் இன்று உயிரோடு இல்லாததால் அவர்களை தவிர்த்திருக்கிறேன்.மேற்கண்ட பலரது படங்கள் நிச்சயமாக நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதும் இதற்க்கு காரணம்!!!நீ மட்டும் எல்லா படத்தையும் பாத்திருக்கியா என்று கேட்டுவிடாதீர்கள்.ஹிஹி!!! 











Saturday 13 April 2013

மஞ்சளாய் ஒரு அசுரன்!!!


இன்றைய பஸிபிக் என்பது அப்படியொன்றும் முற்றிலும் பஸிபிக் அல்ல.நாம் (சீனா)எப்போது முழுமையாக அதை கைப்பற்றுகிறோமோ ,அப்போதுதான் அது உண்மையான பஸிபிக் ஆகும்
                                                    ____ மா-சே-துங்.

சமீப காலமாக உலகத்தின் ஆகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிகொண்டிருக்கும் நாடு வட கொரியா.கிழக்கு ஆசியாவில் ஜப்பானுக்கு மேற்கே மஞ்சள் கடலுக்கும்,ஜப்பான் கடலுக்கும் இடையே அமைந்துள்ள கொரிய தீபகற்பத்தின் வடக்கே சீன எல்லையோரம் இடம்பெற்றிருக்கும் வட கொரியா ஒரு கம்யூனிஸ பயங்கரவாத நாடாகும்.இந்த தேசம் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்கள் கொரியன் என்ற ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்.இந்த இனம் சீன புராதன பழங்குடி இனக்குழுக்களின் ஒரு கிளை இனமாக கருதப்படுகிறது.

5000ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரிய சாம்ராஜ்யம் பல்வேறு அரசுகளின் எழுச்சி,வீழ்ச்சிகளுக்கு பிறகு 1910ஆம் ஆண்டு ஜப்பானிய பேரரசின் ஆளுகைக்குட்பட்டது.இரண்டாம் உலக போரில் ஜப்பான் மண்ணை கவ்விய பிறகு ,அமெரிக்காவும்,சோவியத் யூனியனும் இந்த தீபகற்ப்பத்தை தங்களுக்குள் பங்குபோட்டு கொண்டன.தென் கொரியா அமெரிக்காவின் நண்பனாக,வட கொரியா சோவியத்தின் தோழனாகியது !!கம்யூனிஸ பயங்கரவாதத்தின் கீழ்வந்த வட கொரியா 1950ஆம் ஆண்டு தென் கொரியாவின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.பதிலடியாக அமெரிக்கா ஐ.நா.உதவியுடன் வட கொரியாவின் மீது போர்தொடுக்க ,மூன்றாண்டுகள் நீடித்த இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 25லட்சம்.பிறகு போர்நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டபோதும் உலகின்  மிக பதற்றம் நிறைந்த பகுதியாக கொரிய தீபகற்பம் விளங்கியது.

தோற்றத்தில் சீனர்களையும்,உயரத்தில் ஜப்பானியர்களையும் போலிருக்கும் இந்த கொரியர்கள் இப்போது உலகின் அரசியல் அதிகாரமட்டத்தில் மிக உயர்ந்த பீடத்தைவகிக்கிறார்கள் .ஐ.நா.பொது செயலர் திரு.பான்-கி-மூன் ஒரு கொரியரே.

வட கொரியாவில் தற்போது ஆட்சியில் உள்ள கிம்-ஜோங்-உன் (வயது 30.அடக்கடவுளே....ஓ ஸாரி...அட கார்ல் மார்க்ஸே)சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் தலைவராக பதவியேற்ற பிறகு இந்த பிராந்தியத்தில் போர்மேகம் சூழ ஆரம்பித்தது.இவரது தந்தை கிம்-ஜோங்-இல் ,தாத்தா இரண்டாம் கிம்-சுங் ஆகியோரும் சுப்ரீம் தலைவர்களாக இருந்தவர்கள்.(அடியேனின் கனவுக்கன்னி கிம் கர்டாசியானுக்கும்,இந்த கிம்-களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஹிஹி!!!)


        மனைவியுடன் வட கொரியாவின் சுப்ரீம் லீடர் கிம்-ஜோங்-உன்.
              

வடகொரியாவின் 2 கோடியே 30 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் டன் அரிசியும் தானியங்களும் தேவைப்படுகின்றன. விளைச்சல், தேவையைக் காட்டிலும் பலபடிகள் பின்தங்கியிருக்கிறது. இவ்வாண்டு ஜூலை மாதம் பெருகிய வெள்ளத்தில், ஒரு லட்சம் டன் அரிசியாக விளைந்திருக்கக்கூடிய பயிர்கள் மூழ்கிப்போயின. அதே மாதம் வடகொரியா ஏவுகணைச் சோதனைகள் நிகழ்த்தியது. இதனால், முன்னதாக ஐந்து லட்சம் டன் உணவுப் பொருளை வழங்க முன்வந்திருந்த தென் கொரியா அதை நிறுத்திவைத்தது.
1995இலிருந்து வடகொரியாவில் ஐ.நா.வின் உலக உணவுச் செயல் திட்டம் (World Food Programme - WFP) பணியாற்றிவருகிறது. இப்போது 13 ஆட்சிப் பகுதிகளில் (counties) 19 லட்சம் பேருக்கு உணவு வழங்கிவருகிறது கீதிறி. யூனிசெஃப் 2004இல் மேற்கொண்ட ஆய்வொன்று சுமார் 40% குழந்தைகளும் 30% தாய்மார்களும் கடுமையான ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. வார்விக் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹேஸல் ஸ்மித், வடகொரியாவின் அணு ஆயுத அரசியலால் அதன் உணவுப் பிரச்சினை உலக நாடுகளின் கண்களில் படுவதேயில்லை என்கிறார்.

1985இலேயே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) ஒப்பிட்டது வடகொரியா. ஆனால் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு 1992இல்தான் இணங்கியது. காரணம், அதுவரை அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தென்கொரியாவில் இருந்தன. அமெரிக்கா-வடகொரியா இடையே பரஸ்பர அவநம்பிக்கை தொடர்ந்தது. 1999இல் கிளின்டனின் அரசு ஒரு இணக்கமான சூழலுக்கு முயற்சித்தது. பொருளாதாரத் தடைகள் சிலவற்றை விலக்கிக்கொண்டது; மின் உற்பத்திக்கு வழிவகுக்கும் மென்னீர் அணு உலைகள் அமைத்துத் தரவும் முன்வந்தது. எனினும் இன்றுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
2001இல் ஜார்ஜ் புஷ் பதவியேற்றதும் அணுகுமுறை மாறியது. ஜனவரி 2002இல், வடகொரியா, ஈரான், ஈராக் ஆகியவை 'தீமையின் அச்சில் சுழலும்' நாடுகள் என்று சாடினார் புஷ். வடகொரியாவுடனான எல்லா நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டன. அவ்வாண்டு இறுதியில் போங்பியான் என்னுமிடத்திலுள்ள அணு உலையில் உற்பத்தி நடப்பது தெரியவந்தது. வடகொரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்தபோது, அது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வாளர்களை வெளியேற்றியது. அடுத்த கட்டமாக 2003இல் NPTயிலிருந்தும் வெளியேறியது. இதே ஆண்டு தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பரப்பில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது. இந்தச் சூழலில்தான் சீனாவின் முன் முயற்சியில் 2003 ஆகஸ்டில் ஆறு நாடுகளின் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது. இடைவெளிகள் நீடித்தபோதும் இது புதிய தொடக்கத்தைக் குறித்தது. 2004 பிப்ரவரியில் இரண்டாம் சுற்றும் ஜூனில் மூன்றாம் சுற்றும் 2005 ஜூலையில் நான்காம் சுற்றும் செப்டம்பரில் ஐந்தாம் சுற்றும் தொடர்ந்தன. ஐந்தாம் சுற்றின் முடிவில் அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக்கொண்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே கிளின்டன் அரசு வாக்களித்த மென்னீர் உலைகள் நிறுவப்பட வேண்டும் என்பதை ஒரு நிபந்தனை யாக வைத்தது. 2005 நவம்பரில் வடகொரியாவின் சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியபோது பேச்சுவார்த்தைகள் முறிந்தன.
அக்டோபர் 9 அன்று அணு ஆயுதச் சோதனையை 'வெற்றிகரமாக' நடத்தியது வடகொரியா. இப்போது சோதித்ததைப் போன்ற அணுகுண்டுகள் வடகொரியாவிடம் இன்னும் சில இருக்கலாம் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள். எனினும் அவற்றைச் செலுத்த வல்ல ஏவுகணைகள் அதனிடம் இல்லை. விமானங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஓரளவிற்கு முன்னதாகக் கண்டறிந்துவிட முடியும். ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தையும் ஆயுதங்களையும் வடகொரியா யாருக்கும் வழங்கலாம் என்னும் அச்சம் பல நாடுகளுக்கும் இருக்கிறது. அதுவே ஐ.நா.வின் தண்டனைத் தடைகளுக்குக் காரணம் எனலாம்.


        தலைநகர் ப்யாங் -யாங்கில் அணிவகுத்து செல்லும் வடகொரிய ராணுவம்.மாவோயிஸ்ட் சீனாவின் ஏவல்நாய்!!!


உள்நாட்டில் கடும் நெருக்கடி.பசி.பஞ்சம்.அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் பொருளாதார தடைகள் காரணமாக வட கொரியா மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது.முழுக்க ராணுவமயமான அரசு மக்களின் குறைந்த பட்ச தேவைகளை நிறைவேற்றக்கூட முடியாமல் திணறிவருகிறது.இந்நிலையில் தென் கொரியாவுக்கு எதிராக போர் பிரகடனம் ஒன்றை வட கொரியா வெளியிட்டிருக்கிறது.தனது நாட்டிலுள்ள அயல்நாட்டு தூதர்களை வெளியேறுமாறும் மிரட்டல் விடுத்துள்ளது.வட கொரிய எல்லையோர பகுதிகள் பெரும் பதற்றத்திற்கு ஆளாகியிருக்கிறது.

தென் கொரிய மக்கள் பொருளாதாரத்தில் மேலோங்கியிருப்பவர்கள்.சொகுசு கார்களில் வலம் வருபவர்கள்.ஹூண்டாய் போன்ற கார்களை தயாரித்து உலகம் முழுக்க ஏற்றுமதி செய்து வளம் கொழிப்பவர்கள்.ஆனால்,வட கொரியர்கள் ஓட்டை,உடைசல் சைக்கிள்களில் வலம் வருபவர்கள்.சிங்கிள் டீக்கே வழியில்லாமல் சிங்கி அடிப்பவர்கள்.வயிற்றுக்கு சோறில்லாமல் அலைபவர்களுக்கு எதற்கு அணுகுண்டு?..அணுகுண்டு தயாரிக்கும் காசில் மக்களுக்கு உணவளிக்கலாமே?என்றெல்லாம் யாரும் கேட்டுவிட கூடாது.சோஷலிச பொன்னுலக பூமியில் இம்மாதிரி கேள்விகேட்டால் அடுத்த நிமிடம் விண்ணுலகம் போய்சேரவேண்டியதுதான்.

யுத்ததிற்கு அமெரிக்காவும் தயார் நிலையில் உள்ளது.ஏற்கனவே தென் கொரியாவில் உள்ள படைகள் போர் ஒத்திகைகளில் ஈடுபட்டுவருகின்றன.போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று யுத்த நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.இருந்தும் தென் கொரிய மக்கள் பெரும் பீதியுடன் நடப்பதை கவனித்து வருகிறார்கள்.போரே வராது என்றும் சிலர் கருதுகின்றனர்.ஆனால்,நிலைமை படு மோசமாக மாறிவருவதால் யுத்தம் வெடிக்கும் அபாயம் குறைந்தபாடில்லை.

அதெல்லாம் சரி.இந்த விவகாரத்தில் சீனா ஏன் தொடர்ந்து மௌனம் சாதிக்கிறது.வட கொரியாவை ஏன் கட்டுப்படுத்த மறுக்கிறது என்று உங்களுக்கு தோன்றுகிறதா?அதுதான் மாவோயிசத்தின் மகிமை.இந்த பதிவின் முதல் வரிகளை மீண்டும் படியுங்கள்.காரணம் உங்களுக்கே புரியும்.

Saturday 6 April 2013

ஒரு ஒப்பந்தத்தின் கதை!!ஒரு கழுதையின் கதை!!!

ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட்ட கதை!



                                               இந்திய பிரதமர்  ராஜீவ் காந்தி 



                           
                 இலங்கை அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனா          
                                 



இந்தியா-இலங்கை ஒப்பந்தம் உருவாகி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ,அதை நினைவுகூரும் நோஸ்டால்ஜியா பதிவு இது!!!

ராஜீவ் காந்தி அவர் வாழ்நாளில் செய்த ஒரே ஒரு உருப்படியான நல்ல காரியம் இந்த ஒப்பந்தமே என்பது அடியேனின் தாழ்மையான கருத்து!!!இலங்கையின் அதிபரும்,பழம்பெருச்சாளியுமான J.R.ஜெயவர்த்தனா -வை பணியவைக்க அவர் மேற்கொண்ட பூமாலை நடவடிக்கை ,கட்சி பேதமில்லாமல் அனைவரின் ஆதரவையும் பெற்றது.இதன் விளைவாகவே இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஜெயவர்த்தனா முன்வந்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண, அன்றைய தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் இணைந்து, சமரச முயற்சியில் ராஜீவ் ஈடுபட்டார். இதன் விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாயிற்று. இலங்கைத் தலைநகரான கொழும்பில் 29-7-1987-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இதில் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட்  ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி அழைத்தார். ஆனால், எம்.ஜி.ஆர். இலங்கை செல்ல இயலாமல் இருந்ததால், தன் சார்பில் அமைச்சர் பண்ருட்டிராமச்சந்திரனை அனுப்பி வைத்தார். இந்த ஒப்பந்தத்தை இலங்கை பிரதமர் பிரேமதாசா, பாதுகாப்பு மந்திரி லலித் அதுலத் முதலி (இந்த "புண்ணியவான்கள்"இருவரும் ஒப்பந்தத்தை முறியடிக்க விடுதலை புலிகளோடு ரகசிய கூட்டு வைத்துக்கொண்டதும்,பிறகு அவர்களால் படுகொலை செய்யப்பட்டதும் பிற்கால வரலாறு!) ஆகிய இருவரும் ஏற்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

(1) ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ராணுவத் தினரும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த வேண்டும்.

(2) மூன்று நாட்களுக்குள் ராணுவத்தினர் அவர்களுடைய முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

(3) இலங்கையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப்புலிகள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று, மற்ற குடிமக்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

(4) தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரே மாநிலமாக ("தமிழ் மாநிலம்") அமைக்கப்படும். இந்த மாநில சட்டசபைக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். ஒருவேளை தாமதம் ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன் நடைபெறும். தேர்தல் நடைபெறும்போது, அதை மேற்பார்வையிட இந்தியாவில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்.

(5) இந்த மாநிலத்துக்கு முதல்- அமைச்சர் இருப்பார். அவரை பொதுமக்கள் தேர்ந்து எடுப்பார்கள். கவர்னரை ஜனாதிபதி நியமிப்பார். "வடக்கு பகுதியுடன் நிரந்தரமாக இணைந்திருக்க விருப்பமா?" என்று, 1988-ம் ஆண்டு கடைசிக்குள் கிழக்குப் பகுதியில் பொது ஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். கலவரம் காரணமாக இலங்கையில் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய 1,30,000 தமிழ் அகதிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.

(6) இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், சுதந்திரத்துக்கும் ஆபத்து உண்டாக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளும், இந்திய மண்ணில் நடக்காதபடி இந்திய அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்.

(7) இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மத்தியில் உள்ள கடல் பகுதியில் விடுதலைப்புலிகள் போர் நடவடிக்கையில் ஈடுபடாதபடி இந்திய கப்பல் படைகளும், கடலோர பாதுகாப்பு படையினரும் கவனித்துக் கொள்வார்கள்.

(8) இந்த ஒப்பந்தத்துக்கு இலங்கை பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும். இதற்காக பாராளுமன்றம் கூட்டப்படும்.

(9) ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றுவதில் இந்திய ராணுவ உதவியை இலங்கை அரசாங்கம் நாடினால் அதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.

(10) இந்தியா வந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்பி அனுப்பும் பணியை, இந்தியா துரிதப்படுத்தும்.

இவ்வாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஒப்பந்தத்தை முதலில் ஆதரித்த விடுதலை புலிகள் பிறகு தங்கள் நிலைப்பாட்டை மாற்றி எதிர்க்க ஆரம்பித்ததும்,ஒப்பந்த ஆதரவாளர்களை கொன்று குவித்ததும் ,அதன் தொடர்ச்சியாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் நாமனைவரும் அறிந்ததே!!!

இந்த ஒப்பந்தம் மட்டும் அன்று முறையாக அமல்படுத்தபட்டிருந்தால் இன்று தமிழீழ மக்கள் அனுபவிக்கும் கொடுந்துயரம் ஏற்பட்டிருக்காது.சிங்களர்களுக்கு சமமான ஒரு அதிகாரத்தை தமிழர்கள் இந்தியாவின் உதவியுடன் பெற்றிருப்பார்கள்.

ஆனால் நடந்ததோ நேர்மாறாக.ஒரு மேற்கத்திய அறிஞர் (பிரெட்ரிக் எங்கெல்ஸ்?)கூறியது இது;  "வரலாறு என்பது மற்ற எல்லா தேவதைகளையும் விட கொடூரமானது"(HISTORY IS A MOST CRUEL OF ALL GODDESSES).
ஈழத்தமிழனின் வரலாறு மற்ற எல்லா தேவதைகளையும் விட கொடூரமானது!!!


அதுசரி.அதென்ன கழுதையின் கதை என்கிறீர்களா.....?இதோ படியுங்கள்.

ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும் இல்லை.

இந்தக் காரணத்தால் கழுதை நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. சலவைத் தொழிலாளி கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான்.

ஒருநாள் சலவைத் தொழிலாளி காட்டு வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது ஒரு புலி செத்துக் கிடப்பதை  கண்டான்.

அதைக் கண்டதும் சலவைத் தொழிலாளிக்கு ஒரு யோசனை தேன்றியது.

இந்தப் புலியின் தோலை உரித்து அதைக் கழுதை மீது போர்த்தி  நெல் வயல்களில் விட்டு மேயச் செய்தால் உண்மையாகவே புலி மேய்வதாக எண்ணிப் பயந்து கொண்டு வயலுக்குச் சொந்தக்காரர்கள் பேசாமலிருந்து விடுவார்கள். கழுதை வயிறார மேயும் என்று சலவைத் தொழிலாளி நினைத்து கொண்டான்.

புலித் தோலை உரித்து எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

மறுநாள் கழுதை மீது புலித் தோலைப் போர்த்தி விளைந்திருந்த வயல்கள் பக்கமாக போகச் செய்தான்.

புலிதான் பயிரை மேய்கிறது என்று எண்ணிக் கொண்டு குடியானவர்கள் அதை விரட்டப் பயந்து கொண்டு பேசாமலிருந்து விட்டார்கள்.

கழுதை விளை நிலத்தில் அன்றாடம் வயிறார மேய்ந்து நன்றாக கொழுத்துவிட்டது.

ஒரு நாள் கழுதை புலித் தோலைப் போர்த்திக் கொண்டு நெல் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு பெண் கழுதை உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கியது.

அதைக்கேட்ட புலித்தோல் போர்த்திய ஆண் கழுதை பெண் கழுதையின் குரலைக் கேட்டதும் உற்சாகமடைந்து தானும் உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கிவிட்டது.

குடியானவர்களுக்கு உண்மை விளங்கிவிட்டது. எல்லோரும் ஒன்று சேர்ந்து தடிகளை எடுத்துக் கொண்டு வந்து கழுதையை அடித்து கொன்றார்கள்.

நீதி: "புலித்தோல் போர்த்திய கழுதைகளை நம்பி மோசம் போகாதீர்!!!"