Saturday 20 April 2013

சாத்தானின் TOP 10 ஸ்பெஷல் !!!


நண்பர்கள் பலருக்கு அடியேனின் பன்முக எழுத்து திறமையை(!)பார்க்க (படிக்க)ஆவல்.அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யாவிட்டால் சாத்தானாக பிறந்ததில் என்ன பலன்? இனி வரும் பல பதிவுகளில் சம்பந்தமில்லாமல் எதையாவது பதிவிட்டிருப்பேன்.சாத்தானுக்கு மறை கழண்டுவிட்டதா என்று சந்தேகப்பட்டுவிடாதீர்கள்.இந்த வார (!)பதிவு டாப் டென் இயக்குனர்கள்.அதாவது,சாத்தானை கவர்ந்த.ஹிஹி!!



10.  K.பாலச்சந்தர் (83)
தமிழ் சினிமாவையும் , கைலாசமய்யர்  பாலச்சந்தரையும் பிரித்துப்பார்க்க முடியாது.மேடை நாடகத்திலிருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு பாணியை வகுத்து,பிடிவாதமாக அதில் பயணித்து வெற்றிகண்டவர்.தனது முதல் படமான நீர்க்குமிழி -யில் நாகேஷை ஹீரோவாக நடிக்க வைத்த துணிச்சல்காரர்.மனித உறவுகளின் பிரச்னைகள்,சமூக அவலங்கள்,சூழலியல் மாற்றங்கள்,காதல்,என்று இவர் கருபொருளாக்கிய திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன.ரஜினி,கமல்,விஜய குமார்,ஸ்ரீப்ரியா,பிரகாஷ்ராஜ்    என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் நூற்றுக்கும் மேல்.90-களுக்கு பிறகு இவர் எடுத்த சில படங்கள் அதீத பிரச்சார நெடியுடன் அமைந்ததால் தமிழ் திரையுலகிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.சின்ன திரையில் நுழைந்து சில புகழ்பெற்ற தொடர்களை இயக்கி அங்கேயும்  முத்திரையை பதித்தவர்.


9. பாலு மகேந்திரா (74)
பாலு மகேந்திரா ஒரு ஈழ தமிழர் என்பது நம்மில் பலரும் அறிந்திராத செய்தி.இவரது உண்மையான பெயர் பாலநாதன் மகேந்திரன். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநிலவிருது பெற்றார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இரண்டு பெண்டாட்டிக்காரன் கதையை வைத்து இவர் இயக்கிய பல படங்கள் பெரும் வரவேற்ப்பை பெற்றவை.(அடியேனுக்கும் இரண்டு பெண்டாட்டிதான்.முதல் பெண்டாட்டியை அரிவாளால் வெட்டி கொன்றேன்.இடம்:கொடுமுடி.முதல் பெண்டாட்டி:ஒரு வாழை கன்று.ஹிஹி!!!)


8. ஜான் வூ (67)
ஜான் வூ ஹாலிவுட்டில் வெற்றிகரமாக கால் பதித்த சீனர்.இவரது ஆக்ஸன் படங்களுக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருக்கிறது.HARD TARGET ,BROKEN ARROW ,FACE /OFF ,போன்ற பல படங்கள் இவரது இயக்கத்தில் வந்திருந்தாலும் அடியேனை பெரிதும் கவர்ந்தது இவரது RED CLIFF .இரண்டு பாகமாக வந்த இந்த ஆக்ஸன் படம் மறக்கமுடியாத ஒரு அற்புதம்.


7. ரோமன் போலன்ஸ்கி (80)
ரஜ்மண்ட் ரோமன் தியெர்ரி போலன்ஸ்கி உலக சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்.பாரிஸில் பிறந்து போலந்தில் குடியேறிய யூதர். சிறு வயதில்
ஜெர்மானிய ஆதிக்கத்தில் போலந்து சீரழிந்ததை நேரடியாக கண்ணுற்றவர்.இவரது பல படங்களில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையில் இவரே.தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையே திரைப்படமாக்கி  உலக புகழ் பெற்றவர்.2002-இல் இவரது இயக்கத்தில் வந்த THE PIANIST மெய்சிலிர்க்க வைக்கும் காவியம்.


6. வூடி ஆலன் (78)
ஆலன் ஸ்டீவெர்ட் கோனிக்ஸ்பெர்க்    என்ற வூடி ஆலன் நியூ யார்க்கில் பிறந்த யூதர்.இவர் ஒரு பன்முக திறமையாளர். திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர், நகைச்சுவையாளர். திரைப்படங்களை எழுதி அவற்றை இயக்கும் இவர் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.2011-இல் இவர் இயக்கிய MIDNIGHT IN PARIS அவசியம் பார்க்கவேண்டிய படம்.


5. அனுராக் காஷ்யப் (41)
அனுராக் சிங் காஷ்யப் உலக தரத்திலான ஒரே இந்திய இயக்குனர் என்பது அடியேனின் கருத்து.இவருடைய ஒவ்வொரு படமும் அதற்கு சான்று பகரும்.2009இல் வெளிவந்த தேவ் டி (DEV D)படம் ஒன்றே போதும் இவரது திறமைக்கு சாட்சி சொல்ல.நாம் அனைவரும் அறிந்த தேவதாஸ் கதையை இப்படிக்கூட படமாக்க முடியுமா என அயரவைத்த அற்புதமான படம் அது.


4. பீட்டர் ஜாக்ஸன் (52)
பீட்டர் ராபர்ட் ஜாக்ஸன் நியூசிலாந்தில் பிறந்த ஹாலிவூட் இயக்குனர்.ஆரம்ப காலத்தில் ப்ரைன் டெட் போன்ற மகா மொக்கை படங்களை இயக்கிய ஜாக்ஸன் உலகம் புகழும் இயக்குனரானது லார்ட் ஆப் த ரிங் படங்கள் மூலமாக.இப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய கிங் காங் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகி வசூல் மழை பொழிந்தது.தற்போது த ஹாபிட் என்ற மூன்று பாக படங்களில் பிஸியாக இருக்கிறார்.அதில் முதலாவது படம் கடந்த டிசம்பரில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


3. ஜேம்ஸ் கேமரூன் (59)
ஜேம்ஸ் பிரான்ஸிஸ் கேமரூன் கனடாவில் பிறந்த ஸ்காட்டிஸ் ஆசாமி. த டெர்மினேட்டர், டெர்மினேட்டர் 2, ஏலியன்ஸ்,டைட்டானிக், அவதார் உள்ளிட்ட புகழ் பெற்ற ஆங்கில திரைப்படங்களை படைத்தவர்.கடந்த ஆண்டு மார்ச் 26இல் உலகிலேயே மிக ஆழமான கடல்பகுதியான மரியானா ட்ரெஞ்ச் -க்கு (ஆழம் 11கிலோ மீட்டர்)தனி ஆளாக சென்று திரும்பிய அசாதாரண துணிச்சல்காரர்.இவரது ஒவ்வொரு படமும் ஏற்கனவே வெளிவந்த இவரது படங்களின் வசூலை முறியடிக்கும்.தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை இவர் அளவுக்கு எந்த இயக்குனரும் தந்ததில்லை என்பதே இவரது திறமைக்கு சாட்சி.

2. மகேந்திரன்.C.(74)
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து சென்ற மாபெரும் கலைஞன்  மகேந்திரன்.இவரது முதல் படமான முள்ளும் மலரும் (இந்த தலைப்பிலுள்ள இரட்டை அர்த்தத்தை கவனித்தீர்களா?)ஆகட்டும் அடுத்தடுத்து இவர் இயக்கத்தில் வந்த உதிரிப்பூக்கள்,மெட்டி,ஜானி,நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற டாப் கிளாஸ் படங்களாகட்டும்  அனைத்துமே சர்வதேச தரமானது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்ய அடியேன் தயார்.இந்த படங்கள் அனைத்துமே மசாலா படங்கள் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


1. ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் (67)
ஸ்டீவென் ஆலன் ஸ்பீல்பெர்க் அமெரிக்காவில் பிறந்த ஜெர்மானிய யூதர்.உலக சினிமா வரலாற்றில் இவர் அளவுக்கு புகழ் ஈட்டிய இயக்குனர் எவருமில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு ஆறு முறை பரிந்துரைக்கப்பட்டு இரு முறை விருது வென்றவர்.1980க்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த அத்தனை பேரும் இவரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களை தத்ரூபமாக திரையில் காட்டி ரசிகர்களை மிரளவைத்தவர்.இவரது இயக்கத்தில் வந்த அற்புதமான படங்களில் அடியேனை பெரிதும் கவர்ந்த படங்கள்; JAWS (1975).E.T(1981)SCHINDLERS LIST(1993)  SAVING PRIVATE RYAN(1998)MUNICH(2005)


இந்த பட்டியலில் அடியேனை கவர்ந்த இயக்குனர்களை வரிசைப்படுத்தியிருக்கிறேன்.இதில் உங்களுக்கு நிச்சயம் முழு உடன்பாடு இராது என்பதை நானறிவேன்.எனினும் உயிரோடு இருக்கும் நபர்களை மட்டுமே நான் கவனத்தில் கொண்டு அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்தேன்.யஷ் சோப்ரா,ரிஷிகேஷ் முகர்ஜி,டோனி ஸ்காட்  போன்ற  என்னை கவர்ந்த இயக்குனர்கள் பலர் இன்று உயிரோடு இல்லாததால் அவர்களை தவிர்த்திருக்கிறேன்.மேற்கண்ட பலரது படங்கள் நிச்சயமாக நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதும் இதற்க்கு காரணம்!!!நீ மட்டும் எல்லா படத்தையும் பாத்திருக்கியா என்று கேட்டுவிடாதீர்கள்.ஹிஹி!!! 











7 comments:

  1. சாத்தானின் டாப் டென் அட்டகாசம்.

    ஆனால் முதல் முறையாக உங்கள் கருத்துக்களுக்கும் என்னுடைய சிந்தனைகளுக்கும் வேறுபாடு உருவாகியிருக்கிறது.

    என்னுடைய டாப் டென்னில் கண்டிப்பாக இதில் இருக்கும் சிலர் இருக்கவே வாய்ப்பில்லை.

    ReplyDelete
  2. ஒரு மாறுதலுக்காக,

    தமிழ் டாப் டென்,

    ஹிந்தி டாப் டென் மற்றும்

    ஆங்கில டாப் டென் என்று அடுத்து விரிவாக பதிவிடுங்களேன்?

    ReplyDelete
  3. சாத்தனின் நல்ல ரசனை அவர் ரிஷிகேஷ் முகர்ஜி படங்களை ரசித்ததில் இருந்தே வெளியாகிறது.

    தொண்ணூறுகளின் முடிவில் அவர் எடுத்த "ஜூட் போலே கவ்வா கா(ன்)டே" என்கிற படத்தை (கல்லூரிக்கு வெட்டு செய்துவிட்டு) மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து சென்று, அவரின் பிம்பம் சிறிது உடைந்த நிலையில் வெளிவந்தேன்.

    கடைசி மேட்ச்சில் டக் அடித்தாலும் டொனல்ட் பிராட்மேனின் ஆட்டத்திறன் பற்றிய சந்தேகம் எழாததுபோல அவரது கடைசிபடம் சொதப்பி இருந்தாலும், அவரது மற்ற க்ளாசிக் படங்களின் வரிசையால் இமையமலையாக உயர்ந்து நிற்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. டியர் கிங் விஸ்வா !!!

      அவரது கோல்மால் படத்தை ,அநேகமாக இந்தியாவின் அனைத்து மொழி இயக்குனர்களும் தங்கள் மொழியில் "சுட்டு"தள்ளியதை மறக்கமுடியுமா?

      Delete
  4. // அடியேனுக்கும் இரண்டு பெண்டாட்டிதான்.முதல் பெண்டாட்டியை அரிவாளால் வெட்டி கொன்றேன்.இடம்:கொடுமுடி.முதல் பெண்டாட்டி:ஒரு வாழை கன்று.ஹிஹி!!! //

    ஒரு கொலை குற்றவாளி இன்னும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு, ஒரு வலைபூ ஆரம்பித்து அதில் தைரியமாக அதை கூறிக் கொண்டும் ... அய்யகோ ... என்ன நடக்குது இங்கே :)

    ReplyDelete
  5. எங்கே மகேந்திரன் அவர்களை குறிப்பிட மறந்துவிடுவீர்களோ என்று நினைத்தேன்........என்னைப்பொறுத்த‌வரை சினிமா என்பது ஒரு விஷூவல் மீடியம் என்பதை மிகச்சரியாக உணரவைத்தவர்......[ அதற்காக மணிரத்னம் போல ஒற்றை வார்த்தை வசனம் பேசி சாவடிக்கவில்லை....... ] ரஜினி என்ற நடிகருக்குள் இருந்த திறமையை வெளிக்கொணர்ந்தவர்.......[ சரத்பாபுவிடம் , கெட்ட பையன் சார் அவன்.......என்று பேசும் இடம் ] உதிரிப்பூக்கள் படத்தின் இறுதிக்காட்சி........சே ....சான்ஸே இல்ல சார்........

    ReplyDelete
  6. ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் கின் "இன்னர் ஸ்பேஸ்" என்ற படம் (1994 களில் வந்தது) என்னை மிகவும் கவர்ந்ததாகும். மனிதனை மிகசிறிய உருவமாக மாற்றி அடுத்தவர் உடம்புக்குள் அனுப்பி ஆராய்ச்சி செய்வார்கள் . வாவ்..... அதீத கற்பனை கலந்த படம்

    ReplyDelete